
தமிழர் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். விவசாயிகளை நினைவு கூறும் வகையில் பச்சை துண்டு அணிந்து பொங்கலை கொண்டாடினர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் ஆண்டுதோறும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தேனியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான கனரா வங்கி சார்பாக இன்று பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தேனி பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள கனரா வங்கிக் கிளை தோரணங்களால் அலங்கரித்து வங்கியின் முன்பாக வண்ண கோலங்கள் வரைந்து, கரும்பு, இளநீர், வாழைப்பழம் வைத்து வழிபட்டனர். மேலும் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ! பொங்கல்! எனக் கோஷமிட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பொங்கல் கொண்டாட்டத்திற்காக வங்கியில் பணிபுரியும் தமிழர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடக மற்றும் பீகார் ஆகிய உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வெளி மாநில ஊழியர்களும் தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேஷ்டி, சேலை அணிந்திருந்தனர். மேலும் விவசாயிகளை நினைவுகூறும் வகையில் பச்சை துண்டு அணிந்து ஆண் பணியாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்திருந்தனர்.

