
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கிப் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இதற்குப் பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதன் பின்னரே வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனிக்கம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
100 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த வழக்கத்தை அவர்கள் இந்த ஆண்டும் கடைபிடித்தனர். 20-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகளில் பழனி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு மாட்டு வண்டிகளைக் கிரி வீதியில் நிறுத்த அனுமதி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாகத் தனியார் வாகனம் நிறுத்தும் இடத்தில் ரூ.400 கட்டணத்துக்கு மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன வசதி இல்லாத காலத்திலிருந்து எங்கள் முன்னோர்கள் மாட்டு வண்டியில் பழனி கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அதேபோல் நாங்களும் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
மேலும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாகவும், சிரமம் இன்றியும் மலைக்கோவிலுக்கு செல்லவும், பின்னர் அங்கிருந்து அடிவாரம் வந்தடையவும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு 1 மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
தற்போது தைப்பூச திருவிழா நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை (30-ந் தேதி) ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதை, யானைப்பாதை வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


