Perambalur Govt Teacher Deepa Murder Case: 3 நாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு!

Advertisements

பெரம்பலூரில் ஆசிரியை தீபா கொலை வழக்கில் போலீசாரின் 3 நாள் கஸ்டடிக்கு பிறகு ஆசிரியர் வெங்கடேசன் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அரசுமேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் தீபா(43). மாற்றுத் திறனாளி. அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசன்(44). திருமணமான இருவருக்கும் தகாத உறவு இருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 15ம் தேதி தீபாவும், வெங்கடேசனும் மாயமாயினர்.

இதனிடையே கடந்த நவம்பர் 29ம் தேதி தீபாவின் கார் கோவை உக்கடம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் ரத்தக்கறை படிந்த சுத்தியல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் தீபா கொலை செய்யப்பட்டிருக்கலாமென போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரமாக்கினர். 85 நாட்களுக்குப் பிறகு கடந்த 8ம் தேதி சென்னையில் ஆசிரியர் வெங்கடேசன் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தீபாவை சுத்தியலால் அடித்துக் கொன்று எரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து போலீசார் வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் கைதானதால் ஆசிரியர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி மத்திய சிறையிலிருந்து வெங்கடேசனை கடந்த 15ம் தேதி இரவு காவலில் எடுத்த போலீசார் அவரை மங்கள மேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று, சடலத்தோடு சுற்றித்திரிந்த சமயபுரம் மற்றும் தீபாவை எரித்ததாகக் கூறிய புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், பின்னர் கோவை உக்கடம் பகுதியில் தீபாவின் காரை நிறுத்திய இடத்திற்கும், பின்னர் மதுரை, தேனி ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று எங்கெங்கு தங்கினார் என்பதை நடித்துக் காட்டச்சொல்லி வீடியோ பதிவுசெய்தனர்.

இந்நிலையில் 3 நாள் போலீஸ் கஸ்டடி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வெங்கடேசனை போலீசார் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *