
ராஜஸ்தானில் ஆடைகளைத் தைத்து தரத் தாமதமானதால் தையல் கடைக்காரரைச் சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெய்ப்பூரில் சோமு நகரில் உள்ள பக்கா பந்தா சௌராஹாவில் உள்ள தேவ் மருத்துவமனைக்கு அருகில் சூரஜ்மல் பிரஜாபத் [60 வயது] ஒரு சிறிய தையல் கடை நடத்தி வந்தார்.
அவரிடம் 5 நாட்களுக்கு முன் ஆடைகளைத் தைக்கக்கொடுத்த 14 வயது சிறுவன் அதை வாங்க நேற்று காலை 10 மணியளவில் கடைக்குச் சென்றுள்ளான்.
ஆனால் ஆடைகளை இன்னும் தைத்து முடிக்கவில்லை என்றும் மதியம் வருமாறும் முதியவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளான்.
அவ்வழியாகப் பைக்கில் சென்ற ஒருவர் இதைப் பார்த்து முதியவரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
தையல் கடைக்கு விரைந்த முதியவரின் மகன் மற்றும் குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தாக்குதல் நடத்திய சிறுவனைத் தப்பிக்கவிடாமல் பிடித்து முதியவரின் குடும்பம் போலீசிடம் ஒப்படைத்துள்ளது.
