Parliament:வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாகவே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

புதுடெல்லி:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள்மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காகக் கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

இந்தச் சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்குக் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

எனினும், இந்தச் சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா பற்றிய மத்திய அரசின் விளக்கங்களை ஏற்கவும் மறுத்து விட்டன. இந்தத் திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து அவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *