
Paris 2023 Hyundai Archery World Cup Stage 4 | Indian archery team
இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் உலக கோப்பை 4-ம் நிலை வில்வித்தை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். இதனால் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளன…
பாரீஸ் பிரான்சில் நடைபெற்று வரும் உலக கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். ஆண்கள் அணிகள் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஒஜாஸ் தியோடெல், பிரத மேஷ் ஜவகர், அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய அணி தென் கொரியாவை எதிர் கொண்டது. இந்த ஆட்டம் 235-235 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது. தொடர்ந்து நடைபெற்ற டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
இந்திய ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சந்திக்கிறது. மகளிர் அணிகள் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத்கபூர் ஆகியோர் அடங்கிய அணி 234-233 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் மெக்சிகோவுடன் மோதுகிறது.

