
சென்னை: சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய சுமார் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார்.
அவர் அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. 2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை சோதனைக்கான சரியான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.

