
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை துவக்கி உள்ளது.
இந்நிலையில்பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீட்டு உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமம் முழுவதும் அகற்றப்பட உள்ள ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து 550 வது நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் குடியரசு தினத்தை ஒட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏகனாபுரம் அம்பேத்கர் திடல் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.

