
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிடையே தற்போது வெளிப்படையாக போர் தொடங்கிவிட்டது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் தாலிபான் அரசு ஆளும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, காபூலில் குறைந்தது மூன்று இடங்களிலும், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.
இதனால், இரு நாடுகளுக்கு இடையில் முழு அளவிலான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கள் ராணுவ முகாம்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதாக கூறப்படும் தகவலை பாகிஸ்தான் நிராகரித்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உள்ளது என்றும் தற்போது வெளிப்படையாக போர் தொடங்கிவிட்டது” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இது பாகிஸ்தான் மீதான இந்தியாவின் மறைமுக போர் எனவும் ஆசிப் குற்றம் சாட்டினார்.



