
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு வாரமும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இறுதியாக கரூர் மாவட்டத்தில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதன் பிறகு விஜய், சேலத்தில் மக்கள் சந்திப்போடு மீண்டும் பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டு தவெக தரப்பில் காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், உரிய கால அவகாசத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி காவல்துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
இதன்பிறகு அண்மையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் கூட்டரங்கில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இந்நிலையில், அடுத்தாண்டு தமிழ்நாடோடு சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் புதுச்சேரியில் டிசம்பர் 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்த தவெக திட்டமிட்டு அனுமதி கோரியது.
இந்நிலையில், “புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு அனுமதி இல்லை. திறந்த இடத்தில் பொது கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம். இடத்தை அவர்களே தேர்வு செய்ய வேண்டும். மேலும், இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி மக்கள் சந்திப்பு நடத்த முடியும்? எனவே தேதியை மாற்றி தள்ளி வைக்க கூறியுள்ளோம்” என புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.




