
‛‛இனி எங்களை பாகிஸ்தானியர்கள் என்று சொல்லாதீங்க.. நாங்கள் பலூசிஸ்தானியர்கள். நாங்கள் பாகிஸ்தானில் இருந்து தனி நாடாக சுதந்திரம் பெற்றுவிட்டோம். எங்களை அங்கீகரிக்க இந்தியா உள்பட சர்வதேச சமூகங்கள் உதவ வேண்டும்” என்று பாகிஸ்தானின் பலூச் தலைவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. இது கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும்.
பாகிஸ்தானும், சீனாவும் சேர்ந்து இங்கிருந்து கனிம வளங்களை கொள்ளையடிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் – ஈரான் எல்லையில் உள்ளதால் பலுசிஸ்தான் மக்களை பாகிஸ்தான் அரசு கண்டுக்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக உள்ளது.
இந்நிலையில் தான் பலுசிஸ்தான் மக்கள் தனி நாடு கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் சமீபத்தில் வலுத்தது. பலூச் விடுதலை ராணுவம் என்ற போராளி குழு பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து மோதியது. அதன்பிறகு பலசிஸ்தான் விடுதலையை அறிவித்தனர். தற்போது நம் நாட்டுடன் பாகிஸ்தான் மோதி வரும் நிலையில் பலசிஸ்தானை அந்த நாடு இழக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் பலூச் போராட்டக்குழுவை சேர்ந்தவரும், எழுத்தாளருமான மிர் யார் என்பவர் இந்தியாவுக்கு மிகப்பெரிய கோரிக்கையை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛பலுசிஸ்தான் மக்கள் தங்களுக்கான தேச விடுதலைக்கான தீர்ப்பை பெற்றுள்ளனர். இந்த விஷயத்தில் உலகம் அதிக நாட்கள் அமைதியாக இருக்க முடியாது.
பலூச் மக்களின் கொள்கை என்பது நாங்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்பது தான். இதனால் இனி எங்களை யாரும் பாகிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டாம். பலுசிஸ்தானியர்கள் என்று அழைக்க வேண்டும்.



