
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் என்பது கடுமையாக வலுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானில் நுழைந்து நம் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம். இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள 13 தொகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 மாதத்துக்கான உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானப்படை விமானங்களும் அவசர கால பயிற்சியை தொடங்கி உள்ளன. அதேபோல் பாகிஸ்தானும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதற்கிடையே தான் எல்லை கட்டுக்காட்டு கோட்டு பகுதியில் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் சவுத்ரி அன்வர் உல் ஹக் மக்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதேபோல் நீலம் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையை ஒட்டியுள்ள மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுதும் உள்ள மதரசாக்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 1000 மதரசாக்கள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பாகிஸ்தான் வசம் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இருநாடுகள் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ளது. இது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் ஏராளமான பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 40 முகாம்கள் வரை இங்கு உள்ளதாக கூறப்படுகிறது.



