
சென்னை சைதாப்பேட்டை அடுத்த சின்ன மவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஜெகன்குமார் என்பவர், அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று மாலை மகாகவி பாரதிநகரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அண்ணா வளைவுப் பேருந்து நிறுத்தத்தில் வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மது போதையில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அப்போது பேருந்தில் டிக்கெட் எடுப்பதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த நடத்துனர் ஜெகன்குமார், கையில் வைத்திருந்த டிக்கெட் எந்திரத்தால் கோவிந்தன் தலையில் அடித்ததில், ரத்தம் கொட்டியதாகத் தெரிகிறது. தொடர்ந்து கோவிந்தன், நடத்துனர் ஜெகன் குமாரை சரமாரியாகத் தாக்கியத்தில், அவர் ஓடும் பேருந்திலிருந்து மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நடத்துனர் ஜெகன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


