
புதுச்சேரியில் புதிய அமைச்சராகத் திருமுருகன் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரைப் பதவிநீக்கம் செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். அவர் அந்தக் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? அல்லது ராஜினாமா செய்தாரா? என்ற குழப்பம் நிலவியது. அமைச்சர் பதவியிலிருந்து சந்திரபிரியங்காவை நீக்கிய முதல்-அமைச்சரின் கடிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான கடிதம் புதுவை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே புதிய அமைச்சரைத் தேர்வு செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் புதிய அமைச்சராகத் திருமுருகன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் புதிய அமைச்சராகத் திருமுருகன் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனத்துக்கான ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கியுள்ளார்.

