
வேலூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஓய்வு பெற்ற அரசு டாஸ்மாக் ஊழியர். இவரது மகன் பூவரசன்(26). வேலூரில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் பள்ளிகொண்டாவை அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா(24) என்பரை 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமானதிலிருந்து வெளியில் எங்கும் அழைத்துச் செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ஐஸ்வர்யா உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியே அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்குப் பூவரசன் மறுத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். வெளியில் சென்ற கணவர் வீடு திரும்பிய நிலையில் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. எவ்வளவு தட்டியும் கதவைத் திறக்காததால் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அப்போது ஐஸ்வர்யா வீட்டின் மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறிக் கூச்சலிட்டார்.
இதனையடுத்து பூவரசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து ஐஸ்வர்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவி தற்கொலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூவரசனை மிகவும் வேதனை அடைய செய்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை அருகே சுற்றி சுற்றி வந்த பூவரசன் உறவினர்களிடம் கழிவறைக்கு செல்வதாகக் கூறவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர் சென்று பார்த்தபோது கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

