P Chidambaram:முதலமைச்சரோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்க கூடாது!

Advertisements

உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தை வரவேற்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் “கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தை வரவேற்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், “புல்டோசர் நீதிக்கு முடிவு கட்டுவோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். பாஜக அரசுகள் ஒன்றியத்திலும் பல மாநிலங்களிலும் கடைப்பிடித்து வந்த புல்டோசர் நீதிக்கு கண்டனம் தெரிவித்து, ஒரு கட்டடம் எப்படி இடிக்கப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல்கள் வழங்குவதாக தற்போது உச்சநீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

சட்டப்படி மட்டுமே நீதி வழங்கப்பட வேண்டுமே தவிர, எந்த முதலமைச்சரோ, ஆளும் அரசோ புல்டோசரை ஆயுதமாக்கி அநீதி இழைக்கக் கூடாது.

அடுத்ததாக உச்ச நீதிமன்றம், கண்மூடித்தனமான கைதுகள், நீண்ட கால காவல் மற்றும் காவல் மரணங்கள் குறித்து தீர்ப்பு வழங்கும் என்று நம்புகிறேன்” என்று ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக,

உத்தர பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கொள்கை (நடவடிக்கை) என்று குற்றம் செய்பவர்களின் வீடுகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.

சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார், கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும் என்று வாதாடினார்.

அப்போது நீதிபதி கவாய் “கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், “ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் ஏன் வீடுகள் இடிக்கப்பட்டன” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோத கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராக தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தாவே மற்றும் சி.யு. சிங் ஆகியோர், தங்களது கட்சிக்காரர்கள் 50-60 வருடங்களாக வசித்து வந்த பூர்வீக வீடுகள் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டுள்ளது. கட்சிக்காரரின் மகன் சரியில்லை என்பதற்காகவோ அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் மீது குற்றச்சாட்டு உள்ளதனாலோ அடாவடியாக எடுத்தவுடனே அவரின் வீட்டை பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *