
ஸ்ரீநகர்:பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லையென ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“இதில் புதிதாக என்ன இருக்கிறது? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை, போட்டிக்குச் செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை.
இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது நம் நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, நல்லுறவு ஏற்பட வேண்டுமானால் பாகிஸ்தானின் பொறுப்பும் கூட என்று நான் இப்போதும் கூறி வருகிறேன்.
இது போன்ற தாக்குதல்கள் நடக்கக் கூடாது, அப்படியொரு சூழல் இருக்கக் கூடாது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் வகையில் பாகிஸ்தானும் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

