Nirmala Sitharaman: டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா முதலிடம்!

Advertisements

திருச்சி: டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருச்சி, சத்திரம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லுாரியில், மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தொழில் நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியடைந்திருப்பது இந்தியா தான். டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

டிஜிட்டல் தொழில் நுட்பம், பண பரிமாற்றத்துக்கு மட்டுமின்றி, கொரோனா காலக்கட்டத்தில், மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லுாரிகளில் அந்தத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்துக்கான எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில், பலதரப்பட்ட பாகுபாடுகள் இருந்தாலும், அனைத்து தரப்பிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான், ‘டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ என்ற தொழில் நுட்பம்.

நல்ல முன்னேற்றமடைந்த நாடுகளைப் போல், இந்தியாவும் 2047க்குள் அந்த நிலையை அடைய முடியும். முன்னேற்றத்தில் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட முடியாது. சீனாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது. பொருளாதாரத்தில், இந்தியா பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். இதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *