
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி இரண்டு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதன் காரணமாக மாநிலத்தில் 2 மாதமாக பதற்றம் நீடித்து வருகின்றது. இந்த வன்முறையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டக் கோரி, பல்வேறு அமைப்பினரும் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு ராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய சேவையை வழங்க மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. செல்போன்களுக்கான இணைய சேவை தடை தொடரும். IP அட்ரஸ் மூலம் நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ள பகுதிகளில் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும்.
ஆனால் இணைய சேவையை பகிர்ந்து அளிக்கப்படும் ஹாட்ஸ்பாட் முறைக்கு தடை தொடரும். வரையறுக்கப்பட்ட கணினிகளுக்கு மட்டும் நாள்தோறும் புதிய ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் இணைய சேவைக்கான உரிமம் வழங்கப்படும். இணைய சேவையை பயன்படுத்துபவர்கள், மற்ற நாடுகளின் இணைய சர்வரை பயன்படுத்தும் VPN செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


