
இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அண்மையில் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வைத் தேசியத் தேர்வு முகமை ரத்துச் செய்துள்ளது. மறு தேர்வு நடத்தும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு மேமூன்றாம் நாள் நடத்தப்பட்டது. மருத்துவராகும் கனவுகளுடன் நாடு முழுவதும் பல இலட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் பல இலட்சம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து ஆராய்ந்த தேசியத் தேர்வு முகமை, மத்திய அரசின் ஒப்புதலுடன் மே மூன்றாம் நாள் நடந்த நீட் தேர்வை ரத்துச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மறு தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மறு தேர்வுக்குப் புதிதாகப் பதிவு செய்யவும், கட்டணம் செலுத்தவும் தேவையில்லை என்றும் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது.



