NEET malpractice issue:சுப்ரீம் கோர்ட்டில் 8ம் தேதி முக்கிய விசாரணை!

Advertisements

நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு விசாரிக்க உள்ளது.

புதுடெல்லி:மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின்போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு புகார் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்குகளைச் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது.

இதனிடையே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் பாட்னாவில் இரண்டு பேரைச் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஜமாலுதீன் என்ற பத்திரிகையாளரைச் சி.பி.ஐ. கடந்த 29ம் தேதி கைது செய்தது. ஜமாலுதீன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோருக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். மேலும், குஜராத்தில் உள்ள கோத்ரா, கோட்டா, ஆனந்த், அகமதாபாத் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடந்தது. இதனிடையே, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வே விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி நீட் தேர்வு தொடர்பான வழக்கின் முக்கிய விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *