
திருப்பதி லட்டில் மாட்டுக்கறி கொழுப்பு கலந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண 11 நாள் விரதம் இருந்து வருகிறார். கோவிலின் படிக்கட்டுகளைப் பவன் கல்யாண சுத்தம் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் மெய்யழகன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது கார்த்தியின் பிரபல காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா காமெடியின் புகைப்படத்தைத் திரையில் போட்டுக் காண்பித்து கார்த்தியிடம் லட்டு வேண்டுமா எனத் தொகுப்பாளர் கேட்டார். அதற்குக் கார்த்தி, “லட்டு குறித்து இப்போது பேசக் கூடாது. மிகவும் சர்ச்சையான விஷயம். எனக்கு லட்டே வேண்டாம் ‘எனக் கூறினார்.
இதற்குப் பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரினார். இதனையடுத்து நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமானிடம் கார்த்தி – பவன் கல்யாண விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த சீமான் , “கார்த்தியிடம் நெறியாளர் லட்டு பற்றிக் கேட்டிருக்க கூடாது. ஆனாலும் அந்தக் கேள்விக்குக் கார்த்தி நாகரீகமாகப் பதில் சொல்கிறார். அவரது பேச்சு யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் இல்லை. இதற்குப் பவன் கல்யாண கோவப்படுவதில் அர்த்தமில்லை.
உடல் எடையைக் குறைக்க தான் பவன் கல்யாண விரதம் இருக்கிறார் என்று அவர் கிண்டலாகத் தெரிவித்தார்.

