
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு அதிகாலை 5 மணிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, யானையுடன் ஜீப் சஃபாரியில் மகிழ்ந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்திற்கு இடையே நேரத்தை ஒதுக்கி, அதிகாலை 5 மணிக்குக் காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்றார்.
அப்போது, பிரதமர் மோடி யானைமீது ஏறி, ஜீப் சஃபாரியில் ஈடுபட்டார். அவர் காசிரங்கா தேசிய பூங்காவில் சுமார் 2 மணி நேரம் செலவிட்டார். முன்னதாக, பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அசாமில் உள்ள தேஜ்பூர் சென்றடைந்தார்.
அங்கு மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவரை மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பிரதமர் அசாம் வருகையையொட்டி அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்ற பிரதமர் மோடி, ராணுவ நிற அரைக்கால் சட்டை அணிந்து, அரை ஜாக்கெட் அணிந்திருந்தார். இது தவிர, அவர் கருப்பு கண்ணாடியுடன் கருப்பு தொப்பியும் அணிந்திருந்தார்.
திறந்த ஜீப்பில் நின்று பூங்காவைச் சுற்றிப்பார்த்தார். பூங்காவில் பணிபுரியும் பெண் காவலர்களிடமும் பிரதமர் மோடி பேசினார். பயணத்தின்போது, பிரதமர் மோடி சில இயற்கை காட்சிகளைக் கேமராவில் படம் பிடித்தார்.
பூங்காவில் இருக்கும் யானைகளைப் புகைப்படம் எடுத்தார். அவரது பயிற்சியாளரைச் சந்தித்தார். காசிரங்காவில் இரவு தங்கிய பிறகு ஜங்கிள் சஃபாரி சென்ற நாட்டின் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
காசிரங்காவிற்கு தனது முதல் வருகையின்போது, பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் அவர் முதலில் யானை சவாரி செய்தார்.
அப்போது, பிரதமர் மோடியுடன் காசிரங்கா பூங்கா இயக்குனர் சோனாலி கோஷ் மற்றும் மூத்த வனத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.



