
நாங்குநேரி காவலர்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது எனக் காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.நெல்லை வழியாகத் தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. அந்தப் பேருந்தில் நாங்குநேரி நீதிமன்றம் முன்பாகக் காவலர் ஒருவர் பஸ்ஸில் ஏறி உள்ளார். அப்போது நடத்துனர் அந்தக் காவலரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்குக் காவலர், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது, என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நடத்துனர் காவலரிடம்,
“அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும்,” எனக் கூறினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில் இது தொடர்பாகப் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லையெனத் தெரிவித்துள்ளது.
“வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்” மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்துத் தான் பயணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. நாங்குநேரி காவலர்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


