
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேபோல அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் நேற்றுக் காலமானார். அவர் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இல. கணேசன் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசியத் துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் எனக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூடச் செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

