Mutharamman Temple: பக்தர்களுக்குக் கட்டுப்பாடு!

Advertisements

குலசை தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பு.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று குலசை எனப்படும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில். கடற்கரையில் அமைந்த மிகவும் பழமையான சக்தி தலமாகும். மதுரையை மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வதைப் போல் இங்கு முத்தாரம்மன் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

அம்மை நோய், தொழுநோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நோய்களைக் குணமாக்கும் தலமாகும். இங்கு 41 நாட்கள் விரதமிருந்து மாவிளக்கு பூஜை, தீச்சட்டி எடுத்தல், வேல் குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபட்டால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் குலசை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். வழக்கமாக நவராத்திரி காலத்தில் வடஇந்தியாவில் தான் தசரா பண்டிகை, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நடைபெறும். அதாவது அம்பிகை, அசுரனை போரிட்டு வெற்றிக் கண்ட நாள். ஆனால் இது தமிழகத்தில் விஜயதசமி என்ற பெயரிலேயே கொண்டாடப்படும்.


தமிழகத்தில் தசரா பண்டிகை கொண்டாடப்படும் ஒரே கோவில் குலசேகரப்பட்டினம் தான். நவராத்திரி துவங்கியது முதல் பத்து நாள் திருவிழாவாகத் தசரா பண்டிகை கொண்டாடப்படும். இந்தத் திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றக் காளி, அம்மன், சிவன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து வருவார்கள்.
இதற்காக 41 நாட்கள் விரதமிருந்து, சுவாமிகளைப் போல் வேடமணிந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். இந்தத் திருவிழாவின்போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

2023 ம் ஆண்டிற்கான தசரா திருவிழா அக்டோபர் 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகள்குறித்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வகையிலான அடையாளங்கள் எதையும் எடுத்து வரக் கூடாது. ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான பனியன்கள் எதையும் அணிந்து வரக் கூடாது. ஜாதிகளை குறிக்கும் பாடல்கள் எதையும் ஒலிபரப்பக் கூடாது. அப்படி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற கட்டுப்பாடுகள் திருச்செந்தூர் போன்ற மற்ற கோவில்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது குலசை தசரா திருவிழாவிலும் அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து ஏற்பாடுகள் கடந்த ஆண்டைவிடச் சிறப்பாகச் செய்யப்பட உள்ளது. கூடுதல் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *