Murder: மாமியாரை வெட்டி சாய்த்த மருமகள்!

மருமகள், மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.


இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.

ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *