
போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டுத் தலைமறைவாக உள்ள கணவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கல்லாவி அடுத்த வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னமுத்து(40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சீதா(36). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் இவர்களைச் சமாதானம் செய்து வந்தனர். நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு முற்றியதை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாகக் கணவனைப் பிரிந்த சீதா தனது குழந்தைகளுடன் செங்கழநீர்பட்டியில் தனியாக வசித்து வந்தார்.
ஆனாலும் கணவர் சின்னமுத்து தன்னுடன் சேர்ந்து வாழும்படி மனைவிக்குப் போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்துள்ளார். இந்நிலையில், சின்னமுத்து செங்கழநீர்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் மனைவியைக் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். இதனால், மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சின்னமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சீதாவின் வயிற்றில் சரமாரி குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சீதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிழந்தார். பின்னர் சின்னமுத்து அங்கிருந்து தப்பித்தார்.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியைக் கொலை செய்து விட்டுத் தப்பியோடி சின்னமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

