
நாட்டின் முதல் பிரதமரான நேருவின் முதல் பழங்குடியின மனைவியென அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட பத்னி தனது 80வது வயதில் காலமானார்.
தன்பாத்: ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, 1959ம் ஆண்டு டிசம்பரில் மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இடைப்பட்ட தன்பாத் பகுதியில் பஞ்செட் அணை திறக்கப்பட்டது. இதனைப் பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் திறந்துவைக்க வேண்டும் என எண்ணிய நேரு, அணை கட்டும் பணியில் ஈடுபட்ட 16 வயது சந்தால் பழங்குடியின பெண்ணான பத்னி மஞ்சியாயின் என்பவரை வைத்து அணையைத் திறந்து வைத்தார். அவரைப் பாராட்டும் விதமாக நேரு, பத்னிக்கு மலர் மாலை ஒன்றை அணிவித்துள்ளார்.
மலர் மாலை அணிவித்ததால், சந்தால் பழங்குடியின வழக்கப்படி நேரு – பத்னி மஞ்சியாயினுக்கு திருமணம் நடைபெற்றதாக அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் கருதினர். பழங்குடி அல்லாத ஒருவரை திருமணம் செய்ததற்காகப் பத்னியை, சந்தால் பழங்குடியினர் புறக்கணித்தனர்,
அவர்களது கிராமத்திற்குள் நுழையவும் தடை விதித்தனர். இதனால் பத்னியின் வாழ்க்கையே மாறியது. பின்னர் அங்கிருந்து வெளியேறிப் பஞ்செட் பகுதியில் வசித்தார். அங்கு அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்று, குழந்தைகளும் பிறந்தன.
நாட்டின் முதல் பிரதமரான நேருவின் முதல் பழங்குடியின மனைவியென அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட பத்னி பற்றி அறிந்த ராஜிவ், பிரதமராக இருந்தபோது 1985ல் மேற்குவங்கம் மாநிலம் அசன்சோலுக்கு சென்றபோது, அங்குள்ள காங்., தலைவர் மூலமாகப் பத்னியை சந்தித்தார்.
முன்பு நடந்த துயரத்தை எடுத்துக் கூறிய பத்னிக்கு, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் (டி.வி.சி) பணி வழங்க ராஜிவ் உத்தரவிட்டார். அதில் பணியாற்றிய பத்னி, 2005ல் ஓய்வு பெற்றார். கடந்த நவ.,17ம் தேதி அவரது மகள் ரத்னாவின் வீட்டில் தனது 80வது வயதில் காலமானார்.

