
விண்வெளியிலும், கடற்படைக் கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பதினோராவது யோகா நாள் இன்று கொண்டாப்படுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கிலோமீட்டர் தொலைவுக்கு மிகப் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜூன் 21ஆம் நாளை உலக யோகா நாளாக ஏற்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தீர்மானம் முன்மொழிந்தபோது, குறுகிய நேரத்தில், உலகின் 175 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றதாகத் தெரிவித்தார். இன்றைய உலகில் இந்த ஒற்றுமை மற்றும் ஆதரவு என்பது இயல்பான ஒன்று கிடையாது என்றார். ஒட்டுமொத்த உலகமும் இன்று ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதுபோன்ற தருணங்களில், யோகா நமக்கு அமைதிக்கான வழியைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். விண்வெளியில் விஞ்ஞானிகளும், ஊர்களில் இளைஞர்களும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அனைத்துக் கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




