
தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்குமுன் சாலைப் பணிகளையும், பாதாளச் சாக்கடைப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துச் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் இப்போது நடைபெறும் சாலைப் பணிகளையும், பாதாளச் சாக்கடைப் பணிகளையும் வடகிழக்குப் பருவமழை தொடங்கு முன் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் வடிகால்களின் பராமரிப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விதிகளுக்குப் புறம்பாக உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்றும், சாலை விளக்குகள், நடைபாதைகளைச் சீரமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



