
மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்குத் தேர்வான 10,205 பேருக்குப் பணி நியமன ஆணைகளைச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அரசுப் பணிக்குத் தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். எப்படியாவது அரசுப் பணி வாங்கிட வேண்டும் என்பதே இளைஞர்களின் கனவாக உள்ளது.
அரசு எந்திரம் நன்றாகச் செயல்பட வேண்டுமென்றால், அரசு அலுவலர்கள் நன்றாகச் செயல்பட வேண்டும். முழு ஈடுபாட்டோடு அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை, எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும். முதல்-அமைச்சராக இருந்து மட்டுமல்ல… தந்தை நிலையில் இருந்தும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.




