
சென்னை: குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நீர் இருப்பு நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தென் மேற்கு பருவமழை காலத்திலும், மழையளவு எதிர்பார்ப்பதை விடக் குறைவாகவே இருக்க கூடும் என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தற்போது அணைகளில் உள்ள நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அடுத்த 2 மாதங்களுக்குக் குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.
குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாகத் தீர்வு காண வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரித்திட வேண்டும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம், கிடைப்பது குறைவு என்பதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


