
தமிழகத்தில் டிட்வா புயலால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியப் போது, புயல் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இதுவரை பெய்யவில்லை எனக் கூறினார். பின்னர், இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடக்கிறது. தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது பெய்த மழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தூத்துக்குடி, தஞ்சையில் 2 பேர் சுவர் இடிந்தும், மயிலாடுதுறையில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் பெய்த தொடர் கனமழையால் 56 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகத் தெரிவித்தார்.



