
புதுடில்லி:
நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களில் தேவைக்கேற்ப பயணிக்கக் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் புதியதாக இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திலீப் குமார் கூறியது, ரயில்களில் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு என்றுமே முன்னுரிமை உண்டு. அவர்களுக்கு அதிக வசதிகள் வழங்க ரயில்வே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
2024ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 583 புதிய பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அவை 229 ரயில்களில் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த மாதத்தில் மேலும் 1000 பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு 647 ரயில்களில் கூடுதலாக இணைக்கத் திட்டமிட்டு உள்ளோம்.
புதிய பெட்டிகள் இணைப்புமூலம் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடுதலாகப் பயணிக்கலாம். வரும் 2 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படும். அதில் 6000 பொது பெட்டிகள், 4000 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாகும். இந்த வசதிகள் வந்தபின்னர் கூடுதலாக 8 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.


