
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் நாளை முதல் 2 நாட்கள் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
பழனி: அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்திலிருந்து செல்லப் படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது. இவை தவிர பக்தர்கள் எளிதாகச் சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன.
இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் தேர்வாக ரோப்கார் உள்ளது. பழனி அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் உள்ள ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்கள் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி அதன் சேவை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தலாமெனக் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

