
Crime | Theft | Guduvancheri
சென்னை கூடுவாஞ்சேரிபகுதியில் வீடுகளில் கொள்ளை அடித்து, நண்பர்களுக்கு மது விருந்து அளித்த திருடனை போலீசார் கைது செய்தனர்…
சென்னை: கூடுவாஞ்சேரி குற்றவியல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில், சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதில் தெரிவித்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அவர் பெயர் சூர்யா (21) என்பதும், கூடுவாஞ்சேரி பகுதியில் பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்ததும் தெரிந்தது.
கூடுவாஞ்சேரி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவில் வசிக்கும் சூர்யா, கொத்தனார் வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தை வைத்து, மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நண்பர்களுடன் கஞ்சா, மது எனப் போதை வஸ்துகளை பயன்படுத்தி ஜாலியாக இருந்துள்ளார்.
செலவிற்கு போதிய பணம் இல்லாததால், கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருடியுள்ளார்.
சில நாட்களுக்கு முன், மீனாட்சி நகர் செல்லப்பா தெருவில் உள்ள ஒரு வீட்டில், நகைகள் மற்றும் 16,000 ரூபாய் திருடி, நண்பர்களுக்கு மது விருந்து நடத்தியுள்ளார். இவ்வாறு, எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பூட்டியுள்ள வீட்டின் கதவுகளை உடைத்து திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது, கையில் இருந்த நகைகளை அடகுக் கடையில் வைத்துப் பணம் பெற கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் வந்தபோது சிக்கிக்கொண்டார். கூடுவாஞ்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். உல்லாசமாக வாழ்வதற்காகத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்திருக்கும், சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

