
பெண்களைவிட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக ‘டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நுகர்வோர் தி இந்தியன் பெர்ஸ்பெக்டிவ்’ அறிக்கை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள்வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களைவிட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதில் கிடைத்த தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர். ஆனால் பெண்களோ ரூ.1830 மட்டும் செலவு செய்கிறார்களாம். இதன்மூலம் பெண்களைவிட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக ‘டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நுகர்வோர் தி இந்தியன் பெர்ஸ்பெக்டிவ்’ அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி 47 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் பேஷன் ஆடைகளை வாங்கி உள்ளனர். அதே நேரத்தில் 23 சதவீத ஆண்கள் மற்றும் 16 சதவீத பெண்கள் ஆன்லைன் மூலம் மின்னணு சாதனங்களை ஷாப்பிங் செய்துள்ளனர். ஜெய்ப்பூர், லக்னோ, நாக்ப்பூர், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள் ஆன்லைனில் பேஷன் ஆடைகளுக்கு 63 சதவீதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு 21 சதவீதம் அதிகமாகவும் செலவழிப்பது தெரிய வந்துள்ளது.

