
தமிழ்நாட்டின் முன்னணி பால் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன் மற்றும் ஆரோக்கியா ஆகிய நிறுவனங்கள் பால் விலையை அதிரடியாகக் குறைத்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட ஆவின் பால் விலை குறைவு என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறையால் பால் விற்பனை பெருமளவு குறைந்தது. மேலும் வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் அவ்வப்போத மழை பெய்து வருவதால் தயிர், மோர் விற்பனை சரிந்தது. இதனால் பால் தேக்கம் அடைந்தது. கடந்த 2 மாதத்தில் பால் விற்பனை 20 சதவீதம் குறைந்ததோடு மட்டுமின்றி தற்போது மழை பெய்து வருவதால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகப் பால் கொள்முதல் அதிகரித்தது. ஆனால் அதற்கு ஏற்ற அளவில் பால், தயிர், மோர் போன்றவை விற்பனையாகவில்லை. இதனால் ஹட்சன், ஆரோக்கியா ஆகிய நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்துள்ளது.
அதன்படி புல்கிரீம் பால் லிட்டர் ரூ.68-ல் இருந்து ரூ.66-ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.37-ல் இருந்து ரூ.36 ஆகவும் குறைந்துள்ளது. அதேபோலத் தயிர் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தயிர் ரூ.71-ல் இருந்து ரூ.67 ஆகவும் 500 மில்லி தயிர் ரூ.32-ல் இருந்து ரூ.30-ஆகவும் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பால் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வந்த ஆரோக்கியா நிறுவனம் முதல் முறையாக விலையைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

