Advertisements

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழக அரசியல் கட்சிகள் உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கின்றன. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் திமுக தரப்பில் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது . அதே வேளையில் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர்கள் போட்டியிட மறுப்பு தெரிவித்து சீமானுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது தவிர காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் ராகுல் காந்தியும் பிரியங்காவும் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் .
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை மும்முரமாக முடுக்கி விட்டிருக்கின்றன. திமுக அதிமுக தவெக ஆகிய மூன்று கட்சிகளும் இப்பொழுதே தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க தொடங்கி விட்டார்கள். இதில் ஒரு கட்டமாக தமிழக வெற்றி கழகம் சார்பில் குடும்பத்திற்கு ஒரு வீடு ஒரு மோட்டார் சைக்கிள் முடிந்தால் ஒரு கார் தருவோம் என தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது .
அதே சமயத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் என்கிற ரீதியில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது . இதற்கிடையே திமுக சார்பில் பெண்களைப் போல் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் தயாராகி வருகிறது . இதன் முதல் கட்டமாக 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் இன்னும் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வருகிறது .
இதைத்தொடர்ந்து அனைத்து ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்ற திட்டம் வரலாம் என அமைச்சர் சிவசங்கர் சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் , அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார்கள் .
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் அவர்கள் இருவரும் தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை நடத்துகிறார்கள். இரண்டு பாதயாத்திரைகளும் தனித்தனியாக நடைபெறுகிறது. பிரியங்கா காந்தியை பொருத்தவரையில் மகளிர் அணி பாதயாத்திரை என்ற பெயரில் பெண்களை வைத்து பாதயாத்திரை நடைபெற இருக்கிறது .
அனேகமாக வருகிற ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இந்த பாதயாத்திரை பயணம் இருக்கும் என தெரிகிறது . இந்த பாதயாத்திரை குறித்து , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது இந்த குழுவினர் பாதயாத்திரைக்கான ஏற்பாடுகளை முழு வீச்சாக செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே கூட்டணி கட்சியாக இருக்கும் திமுகவுக்கு இது பற்றி டெல்லி காங்கிரஸ் மேலிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது . இந்த சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியை பொறுத்த வரையில் முதல் கட்டமாக 100 வேட்பாளர்களை நாம் தமிழர் சீமான் அறிவித்திருக்கிறார்.
இதில் ஏராளமான பெண் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட விரும்பவில்லை என சீமானிடம் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள். தங்களிடம் தேர்தலை எதிர்கொள்வதற்கு போதிய பண வசதி இல்லை மேலும் களப்பணி ஆற்றுவதற்கும் எங்களிடம் ஆட்கள் இல்லை என தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து நான் ஆலோசித்து முடிவு செய்கிறேன் என சீமான் பதில் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே ஆண் வேட்பாளர்கள் பலரும் தாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அந்தந்த, மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு எதிராக செயல்படுவார்கள் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அவர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .
இது இல்லாமல் பல மாவட்ட நிர்வாகிகளுக்கு வேட்பாளர் சீட் தரவில்லை என அவர்களும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் நாம் தமிழர் கட்சியில் தற்போது மிகப்பெரிய உள் கட்சி கலவரம் நடைபெற்று வருகிறது . இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிகழகம் இந்த தேர்தலில் போட்டியிடுவதால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சரியும் என உளவுத்துறை ரிப்போர்ட் ஒரு முக்கிய தகவலை தெரிவித்து இருக்கிறது .
இதனால் நாம் தமிழர் சீமான் தற்பொழுது மிகவும் மனமுடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது . இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவித்த வேட்பாளர்களில் மீண்டும் மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது . பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் இன்னும் பத்து நாட்களில் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார் . அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து , ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த், அன்புமணி , பாரிவேந்தர் , ஜான்பாண்டியன் ஆகியோர் இடமும் அவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இதன் மூலம் அதிமுகவின் இறுதி கட்ட கூட்டணி முடிவுகள் வெளிவரும் என தெரிகிறது .இதற்கிடையே பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்த தேர்தல் களத்தில் இறங்குகிறார். தமிழ்நாடு முழுவதும் அவர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் வகையில் பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன
ஒருவேளை நடிகர் சத்யராஜ் கூட திமுகவுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணம் செய்யலாம் என தெரிகிறது.
Advertisements




