மோடிக்கு பிறகு இந்தியாவின் பிரதமர் யார்? 75 வயதாகியும் பிரதமர் மோடி ஏன் ஓய்வு பெறவில்லை?

Advertisements
அடுத்த இந்திய பிரதமர் யார் என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியிடமும், ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியிடமுமே முழுமையாக உள்ளது று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில பங்கேற்றிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது, பா.ஜ.க.வின் சித்தாந்த வழிகாட்டியாக கருதப்படுவதால், அதன் தலைமை எடுக்கும் நிலைப்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மோடிக்கு அடுத்து இந்தியாவின் பிரதமர் யார்? என்ற கேள்விக்கு மோகன் பாகவத் பதிலளித்தபோது “பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் இது குறித்து விவாதித்து முடிவெடுப்பார்கள். இதில் எனக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை. நான் நன்மையை மட்டுமே விரும்ப முடியும், வேறு எதுவும் இல்லை.
மோடிஜிக்கு பிறகு யார் பிரதமர் என்பதை மோடிஜியும் பா.ஜ.க.வும்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் மூலம், பிரதமர் தேர்வு விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேரடியாக தலையிட விரும்பவில்லை என்பதை பாகவத்தின் பதில் தெளிவாக உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அரசியல் களத்தில் நிலவும் மற்றொரு முக்கிய விவாதமான, தலைநகரத்தை மாற்றுவது குறித்த கேள்விக்கும் மோகன் பாகவத் பதிலளித்தார்.அரசாங்கத்தின் விஷயம்  குறித்து  அவர்கள் ஆலோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு விஷயத்திலும் சாதகங்களும் பாதகங்களும் இருக்கின்றன” என்று கூறி, இந்த விவகாரத்திலும் ஆர்.எஸ்.எஸ். தனது கருத்தை திணிக்கப்போவதில்லை என்பதை உணர்த்தினார். முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை ஆளும் கட்சியின் நிர்வாகத்திடமே விட்டுவிடுவதில் ஆர்.எஸ்.எஸ். தலைமை உறுதியாக இருப்பதை பாகவத்தின் பதில்கள் உறுதிப்படுத்துகின்றன.

உண்மையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் மோடிக்கு 75 வயது ஆன பிறகு அவர் அரசியல் ஓய்வு பெறுவார் என்ற ஊகங்களுக்கு மோகன் பாகவத் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், தானும் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸ். சங்கம் தங்களை வேலை செய்ய சொல்லும் வரை இருவரும் தொடர்ந்து பணியை செய்வோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த செப்டம்பர் மாதத்தில் தான் மோகன் பாகவத் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் 75 வயது நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் அவர் அளித்துள்ள பதில், செப்டம்பரில் அவர் வெளியிட்ட கருத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பணிகளில் தொடர்ந்து இருவரும் ஈடுபடுவார்கள் என்றாலும், நாட்டின் பிரதமர் பதவியை தீர்மானிக்கும் முடிவை ஆர்.எஸ்.எஸ். தலைமை எடுப்பதற்கு பதிலாக,அது முழுக்க முழுக்க ஆளும் பா.ஜ.க.வின் உள் விவகாரம் என்பதை மோகன் பாகவத் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது பா.ஜ.க.வின் மத்திய தலைமைக்கு வெளிப்படையாக அதிகாரம் வழங்குவதை குறிக்கிறது. மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்த இந்த ஆணித்தரமான கருத்துகள்,பிரதமர் பதவி குறித்த விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மறைமுக தலையீடு இருக்கும் என்ற ஊகங்களுக்கு முடிவுகட்டி, முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் மோடி மற்றும் ஆளும் கட்சியின் மத்திய தலைமையிடமே உள்ளது என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *