Advertisements

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து நடைபெற்று வருகிறது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. அவரது அறையில் அரை நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட உடலில், கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் இரத்தம் வழிந்தோடியது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாடெங்கிலும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றது. அந்த துயர சம்பவத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே மீண்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் அமைந்திருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இரண்டாம் ஆண்டு பயின்று வந்த அவர் தன் நண்பருடன் இரவு வெளியே உணவருந்தி விட்டு மீண்டும் கல்லூரிக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் மாணவியை இழுத்துச் சென்று கல்லூரி வளாகத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரண்டு நபர்கள் தலைமறைவாக உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவிகளை வழங்க ஒடிசாவில் இருந்து அரசு அதிகாரி குழு ஒன்று மேற்கு வங்கத்திற்கு விரைந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில பாஜகவினர் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என திரிணாமுல் காங்கிரஸ் கேட்டு கொண்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இரவு 12:30 மணிக்கு கல்லூரி விடுதியை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் எப்படி அந்த நேரத்தில் வெளியே வர முடிந்தது? இரவில் பெண்கள் கல்லூரி விடுதியை விட்டு செல்ல நிர்வாகத்தினர் அனுமதித்திருக்க கூடாது எனக் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும், பெண்கள் பாதுகாப்பு என பேசும் மாநில முதல்வரே வெளியே வர வேண்டாம் என கூறுவது ஏற்புடையது அல்ல என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisements


