
இந்திய வெளியுறவு சேவை உயர் சாதி சேவையாக இருந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பேசியுள்ளார்.
டெல்லி:காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாகிஸ்தான் அணுக் குண்டு வைத்துள்ளதால் அந்நாட்டிற்கு இந்தியா மதிப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில், மணிசங்கர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தலைநகர் டெல்லியில் எழுத்தாளர் பட்டாசார்ஜி எழுதிய நேருவின் முதல் ஆள்சேர்ப்பு என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மணிசங்கர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் மணிசங்கர் பேசியதாவது, நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு கடைசியாகத் தேர்வு செய்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரி நான்தான். நாடு முதல் தலைமுறை பணியாளர்களிடமிருந்த மோசமான அம்சங்களைத் தற்போது முறியடித்துள்ளது. இந்திய வெளியுறவு சேவை எனது தலைமுறையிலும் 21ம் நூற்றாண்டிலும் உயர் சாதி சேவையாக இருந்தது. மெக்காலேவின் (இந்தியாவில் நவீன கல்வி கொள்கையை அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்) குழந்தையாக இந்தச் சேவை இருந்தது. ஆனால் தற்போது இந்திய வெளியுறவு சேவை மிகவும் ஜனநாயகம் மிக்கதாக உள்ளது. இந்தி மொழி பேசுபவர்கள் அதிகமானோர் அதில் உள்ளனர். வெளியுறவு சேவையில் நாட்டின் கலவையான சுவையைக் கொண்டுவந்துள்ளோம். இது மிகவும் நல்லதுஇவ்வாறு அவர் கூறினார்.


