
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேலகுடா, நியூ வெங்கட்ராமா காலனியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி (35). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மனைவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மனைவியைக் கொலை செய்தார். பின்னர் இரக்கமின்றி மனைவியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டினார்.
எலும்புகளைத் தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றைக் குக்கரில் போட்டு வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்புத் துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசினார்.
இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பாகக் குருமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் பிரிட்ஜில் வைத்துள்ளார்.
இந்த உடலை எப்படி அழிப்பது என நீண்ட நேரம் யோசித்தார்.
செல்போனில் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களைப் பார்த்து எலும்புகளைக் கரைப்பது எப்படியென வீடியோக்களைப் பார்த்தார்.
இதனைத் தொடர்ந்து நாய் ஒன்றை கொன்று சோதனை செய்ய முடிவு செய்தார். அவரது வீட்டின் அருகே சுற்றி திரிந்து கொண்டிருந்த நாய் ஒன்றை உணவளிப்பது போல வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
உள்ளே வந்த நாயை அடித்துக்கொன்று துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் நாய் கறி எலும்புகளைக் குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாய் தண்ணீரில் கரைத்துள்ளார்.
அதே பாணியில் மனைவியை வெட்டிச் சமைத்து தண்ணீரில் வீசியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
