
தனது காஸ்டிங் கவுச் அனுபவம்குறித்து -பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பேசி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மல்லிகா ஷெராவத் 2003-ம் ஆண்டு க்வாஹிச் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் மர்டர் படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஆப் கா சுரூர், வெல்கம், டபுள் உள்ளிட்ட வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து முன்னணி நடிகையாக மாறினார் மல்லிகா ஷெராவத். இவர் தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்திருப்பார்.
மேலும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டிற்கு சென்ற வெகுசில பாலிவுட் நட்சத்திரங்களில் மல்லிகா ஷெராவத்தும் ஒருவர். ஹ்ளிஸ், பாலிடிக்ஸ் ஆஃப் லவ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்தார்.
இந்த நிலையில் தனது காஸ்டிங் கவுச் அனுபவம்குறித்து மல்லிகா ஷெராவத் பகிர்ந்துள்ளார். பாலிவுட்டில் தான் சமரசம் கொள்ளவில்லை என்பதால் பல பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளார்.
படத்தின் ஹீரோவுடன் சமரசம் செய்து கொள்ளாவிட்டால் அந்த படத்திலிருந்து விலக நேரிடும் என்று கூறிய அவர் சில நடிகர்கள் நடிகைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.
பலரும் அதை ஏற்றுக்கொண்டு பட வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். ஆனால் என்னால் அவ்வாறு சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் ஆவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “ நான் ஒரு படத்தின் நடிக்கிறேன் என்றால், அந்தப் படத்தின் ஹீரோ என்னை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வருமாறு அழைத்தாலும் நான் போக வேண்டும். நான் போகவில்லை எனில் என்னைப் படத்திலிருந்து நீக்கிவிடுவார்கள். இந்த மோசமான செயல் என்னை அதிகமாகப் பாதித்தது. சமரசம் செய்ய மறுத்ததாலேயே நிறைய படங்கள் என்னைக் கைவிட்டு போனது.
என்னிடம் 65 கதைகள் இருந்தன. ஆனால் நான் ஹீரோக்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பதால் அதில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. நான் திரையில் குட்டை பாவாடை அணிந்தால், முத்தம் கொடுத்தால், நிஜத்தில் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
திரையில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் நிஜத்தில் ஏன் என்னுடன் அப்படி இருக்க முடியாது என்று என்னிடம் கேட்டனர். ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் பல படங்களிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் திரையில் நடிப்பதை பார்த்துச் சில ஆண்கள் என்னிடம் சுதந்திரம் எடுத்துக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.


