
மகாத்மா காந்தியின் 78ஆவது நினைவுநாளையொட்டித் தில்லி ராஜ்காட்டில் உள்ள அவர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் தில்லியில் வழிபாட்டுக் கூட்டத்தில் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் நினைவுநாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டித் தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணனும் காந்தி நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சஞ்சய் சேத், மனோகர்லால் கட்டார் ஆகியோர் உடனிருந்தனர்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற கீதாஞ்சலி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


