
புதுச்சேரி: கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளன . ஆனால் அந்த மருந்து இல்லையெனப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இ.பி.எஸ்., பேசுகிறாரெனத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்குறித்து கேட்டறிந்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சிகிச்சை பெறும் 17 பேரில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் அருந்தியவருக்கும் இன்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது. கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும், ‛ OMEPRAZOLE ‘ மருந்து கையிருப்பில் இல்லையெனப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் பேசி உள்ளார். ஆனால், சிகிச்சைக்குத் தேவையான அளவு 4.42 கோடி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுளளார். அவரின் பேச்சு எரியும் நெருப்பில் குளிர்காய்வது போல் உள்ளது.
கள்ளச்சாராயம் அருந்திப் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வரத் தயங்கியதால் இந்தளவு உயிரிழப்பு ஏற்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட போதும் அவர்கள் மருத்துவமனைக்கு வர மறுத்தனர். ஆனால், 55 பேர் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.




