M.K.Stalin:ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல்-அமைச்சர்!

Advertisements

அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன், தமிழகத்தில் தொழில் தொடங்கப்படுவது பற்றி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

நியூயார்க்:உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதேபோன்று, பேபால் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, மைக்ரோசிப் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுபோன்று, தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுபற்றி அந்நிறுவனங்களின் உயரதிகாரிகள், பிரதிநிதிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்து உள்ளார். அதிகாரிகளை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், தமிழகத்தில் தொழில் தொடங்கப்படுவது பற்றி அந்நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேசினார் என அந்த பதிவு தெரிவிக்கின்றது.

ஆசியாவின் வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாக தமிழகம் முன்னணியில் திகழும் வகையில், பல்வேறு வாய்ப்புகளையும் மற்றும் வணிக ஒப்பந்தங்களையும் வலுப்படுத்தும் முடிவுடன் செயல்படுகிறோம் என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *