
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்தக் காணொலி காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு தான், கிராம சபை கூட்டங்களை முறையாக, தடங்கல் இல்லாமல் நடத்தி கொண்டு வருகிறோம். கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்தச் சூழலிலும் தடை இல்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோலக் கிராம சபைக் கூட்டங்களைத் தடை இல்லாமல் நடத்துகிறோம்.
மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். உத்திரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதைச் சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள்.அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை.
இப்படித் தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால், கிராமங்களில் தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்திலிருந்து வருகிறது. கிராம சபைகள் கூட்டங்கள் குறைந்தது ஆண்டுக்கு நான்கு முறை நடக்க ேவண்டும் என்று கலைஞர் மாற்றி அமைத்தார். தற்போதைய திராவிட மாடல் அரசானது, இதை ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று அதிகரித்திருக்கிறோம்.
M. K. Stalin Gram Sabha Meeting


