Uttarkhand:கனமழை, நிலச்சரிவுக்கு வாய்ப்பு; இன்னும் 2 நாளைக்கு ஆன்மிக பயணம் வேண்டாம்!

Advertisements

டேராடூன் : உத்தரகண்டில் மிகக் கன மழை முதல் அதி தீவிர கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், மக்கள் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வட இந்தியா நிலப்பரப்பின் மேல் மிகப்பெரிய குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இதனால், இன்று ( செப்.,13) முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிகக் கன முதல் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 150 – 350 மி.மீ., அளவு மழை பதிவாகக்கூடும். எனக்கூறப்பட்டு உள்ளது.

ரெட் அலெர்ட்

டேராடூன், பவுரி கர்வால், பகேஷ்வர், சம்பாவாத், நைனிடால், உத்தம் சிங் நகர் மற்றும் ஹரித்வார் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம்’ ரெட் அலெர்ட் ‘ விடுத்துள்ளது. இம்மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் நிலச்சரிவு, மண்சரிவு போன்றவை ஏற்படக்கூடும்.

இதன் காரணமாகப் பாலங்கள் சேதமடையக்கூடும், சாலை போக்குவரத்து பாதிக்கப்படலாம். மின்சாரம் மற்றும் குடிநீர் சேவையில் இடையூறும் வரலாம். கனமழை காரணமாக , அணைகள் நிரம்பி உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்படும். இதனால், தாழ்வான இடங்கள் வெள்ளநீரில் மூழ்குவதுடன், காட்டாற்று வெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எச்சரிக்கை

மக்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதுடன், அங்குச் சென்றுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக பயணம் மேற்கொள்பவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *